காதல் எது? நட்பு எது?

திங்கள், 15 மார்ச், 2010

முதல் பக்கம்

ஒவ்வொரு கேள்வியாய் எனக்குள் முளை விட்டுக் கொண்டே இருக்கிறது. இது இப்படியே நீடிக்க வேண்டும் என்று விரும்புவது எப்படி சாத்தியம்? நாளை உனக்கொரு வாழ்க்கை வரும் போது இதே நெருக்கம், அன்னியோன்யம் நமக்குள் இருக்குமா? அப்போது என்னைப் பிரிவதற்கு தயாராகத்தானே இருக்கிறாய். நட்பும், ஈர்ப்பும் இருக்கும் இந்த உறவு அடுத்த நிலைக்கு செல்வதில் என்ன சிக்கல்? அதன் பயணம் குறித்துத்தானே.. அது பயணப்பட்டால் தானே தெரியும். நீ சொல்வது போல் அந்த பயணத்தில் சிக்கல் ஏற்பட்டால் மீண்டும் நட்பு என்கிற பெயரில் கூட உலவ முடியாது என்கிறாய்.. சரி.. அப்படி என்ன சிக்கல் வருமென்று நீ அறிந்தாய்.. சிக்கல் வருமென்று தெரிந்தால் எதைத்தான் செயல்படுத்த முடியும்? எல்லா உறவிலும் சிக்கல் இருக்கத்தானே செய்கிறது. உனக்கு இதுவரை காதலே வந்தது கிடையாது என்கிறாய். ஏழு மாத காலம் உன்னிடம் என்னிலிருந்து கொட்டியவை எல்லாம் நட்பின் உள்ளீடான காதல் என்று ஒருமுறை கூட நீ உணரவில்லையா? நட்பில் இருக்கும் காதலையும், காதலில் இருக்கும் நட்பையும் அறிய முடியாதவனா நீ?

நான் ஆரம்பத்தில் இருந்தே நட்பைத் தாண்டிய ஒரு உணர்வில்தான் பழகி வருகிறேன் என்பதை உனக்கு உணர்த்தி இருக்கிறேன். நீயும் கூட அது எதையும் மறுக்கவில்லை. ஏற்கவும் இல்லை. மௌனித்தே என்னை ஆட்கொண்டிருந்தாய். ஒருவேளை இது நட்புதான் பெரிதாக ஆசையை வளர்த்துக் கொள்ளாதே என்று நீ அறிவுறுத்தியிருக்கலாம். ஆனால் இப்போது உன் மீது குற்றம் சாட்டவோ, என்னை நிரூபிக்கவோ நான் இதைச் சொல்லவில்லை

இரண்டாம் பக்கம்

காதல் இயல்பாக வர வேண்டும். அது திணிக்கப்படக்கூடாது. நான் அதைத்தான் விரும்புகிறேன். இது நிராகரிப்பல்ல என்கிறாய்? அப்படியெனில் இதற்கு பெயர் என்ன? உன்னை எப்படி புரிந்து கொள்வது? இந்த நட்பு ஆயுள் முழுதும் இதே இறுக்கத்துடன் வேண்டும் என விரும்புகிறாய். இதில் இரண்டு சிக்கல் இருக்கிறது. ஒருவேளை நானே இணையாகும் பட்சத்தில் நட்பு வேறொரு பரிமாணத்தில் காதலாகி அது இன்னும் வேறு சில எல்லைகளைத் தொடும் போது நட்புக்குள் இருந்த காதல் உருமாறி காதலுக்குள் ஒரு நட்பு ஜனித்திருக்கும். அப்போது நீ நினைத்தது போல் இந்த நட்பு வேறொரு புதிய பயணத்தை ஆரம்பிக்கும். இது இல்லாமல் நீ வேறொரு வாழ்க்கையில் புகும்போது நமக்கிடையேயான நெருக்கம் ஒரு மலையிலிருந்து துண்டாகப் பிரிந்து விழும் பாறையைப் போல, பனிமலையின் ஒரு பகுதி பிரிந்து கடலோடு போவது போல போய்விடும் என்பதில் சந்தேகமில்லை. இதே நட்பு அதன் பிறகும் இப்படித் தொடராது. அப்படியெனில் நீ இந்த நட்பை இழக்க நேரும். முதல் வழியில் நாம் ஒரே திசையில் வேறொரு புதிய பயணத்தைத் தொடர்வோம். இரண்டாவது வழியில் நமது பயணம் தனித்தனி திசையில் அமையும் போது ஒருவருக்கொருவர் விட்டுத் தர வேண்டிய நிறைய விஷயங்கள் இருக்கிறது. எனக்கு விட்டுத் தரக் கூடிய பக்குவமில்லை. 

அதே நேரத்தில் இதையெல்லாம் உன்னிடம் சொல்லி என்னை ஏற்றுக் கொள்ள வைப்பதில் உடன்பாடில்லை. உனக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லாத போது அதை திணிப்பது தவறு. அதுமட்டுமின்றி என்னைப் பொறுத்தவரை இருவருக்கும் இயல்பாக அந்த எண்ணம் தோன்ற வேண்டும். ஒருவர் ஒருவரின் மீது திணிப்பது நட்புக்கு அழகல்ல. காதலுக்கும் முறையல்ல. நீ சொல்வது போல் பார்த்தால் இது நட்பை விஞ்சிய உறவு. இன்னும் சொல்லப் போனால் காதலைத் தொடாத உறவு. நட்புக்கும், காதலுக்கும் இடையே நூலிழை போல் நகரும் இந்த உறவினை எது விழுங்க இருக்கிறது என்பதை காலம்தான் தீர்மானிக்கும். அதனால் தான் இன்னும் சிறிது அவகாசத்தை என் தந்தையிடம் கேட்டிருக்கிறேன். இந்த இடைவெளியில் நிகழும் நம் பயணத்தில் வேறொரு பரிமாணம் கூட நிகழ வாய்ப்பிருக்கலாம். 

மூன்றாவது பக்கம்

என்னைப் பொறுத்தவரை நட்புக்கும், காதலுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. நட்பில் வெளியாகாத இன்னும் சில கதவுகள் காதலில் திறக்கும். நட்பில் வெளியான சில கதவுகள் காதலில் மூடிக் கொள்ளும். ஒன்றிலிருந்து ஒன்று பிறக்கும் போது பழையன கழிந்து புதியன புகும். பழையதே போதும் என்று தேங்கி விடுவது எந்த வகையில் நியாயம்? ஆனால் இப்போதும் உன்னை வற்புறுத்தவில்லை. அதைத் தவறாகப் புரிந்து கொள்ளாதே. நட்புக்கும், காதலுக்கும் நூலிழை வேறுபாடுதான். காதலில் உடலும், உள்ளமும் பேசும். நட்பில் உள்ளம் மட்டுமே பேசும். அவ்வளவுதான்.

எனக்கு நீ காதலின் வெளிகள் பற்றி சில முன்னுரைகள் கொடுத்தாய். அவை எனக்கும் தெரியும்தான். அதற்கு சில எல்லைகள் உண்டு என்பதை நானுமறிவேன். அதைப் புரியாமலா உன்னுடன் நெருங்கியிருப்பேன். ஒன்று வேறொன்றாக பரிணமிக்கும் போது ஒன்றும் அதில் இருக்கத்தான் செய்யும். ஒன்றும் ஒன்றும் இரண்டாகும் போது அங்கே ஒன்று அழிந்தாவிடும்? இரண்டுக்குள் ஒன்று இருக்கத்தானே செய்யும். இப்படியெல்லாம் விளக்கி உன்னை மனமாற்ற விரும்புகிறேன் என்று எண்ணி விடாதே. அப்படி ஒருபோதும் செய்ய மாட்டேன். ஒருவேளை உனக்கு இதையும் மீறிய சில எண்ணங்கள் இருக்கலாம். என் கடந்தகாலத்தின் பக்கங்களில் சிலவற்றைக் காண்பித்ததால் நீ சற்று பின்வாங்கியிருக்கலாம். ஆனால் எந்த காரணத்தாலும் உன் மீதான ஈர்ப்பு குறைந்து போய் விடாது. இப்போது இருக்கும் நெருக்கத்தில் இருந்து விலகிப் போய் விடமாட்டேன். இன்னுமாய் நெருங்குவேன். 

நான்காவது பக்கம்

சில கேள்விகளை உன்னிடம் முன்னிறுத்துகிறேன். அவ்வளவே. இன்னும் சில நாட்கள் சென்றால் ஒருவரை விட்டு ஒருவர் பிரிய முடியாத சூழல் ஏற்படலாம். அப்போது உன் மனம் மாறலாம். நீ காதலிக்கவே தெரியாதவன் என்கிறாய். அப்படியல்ல. நீ காதலை உணராதவன் அவ்வளவே. இது காதலா என்று கூட அறிந்து கொள்ள முடியாதவன் வேறென்ன சொல்ல. அல்லது அறிந்தும் பின்வாங்க வேறு ஏதேனும் காரணம் இருக்கலாம். நீ ஒத்துக் கொள்ள தயங்கலாம்.

இதையெல்லாம் சொல்வதால் என் காதலை உன் மீது திணிப்பதாகவோ, நிராகரிக்கப்பட்டதின் வெளிப்பாடாகவோ, புறக்கணிப்பின் வலியாகவோ, ஏதிலியின் எண்ணங்களை முன் வைப்பதாகவோ நினைத்து விடாதே. உன்னைப் போல் என்னை யாரும் அசைத்து சென்றதில்லை. உன் விலகல் தான் நான் நெருங்க இன்னும் காரணம். ஒரு பெண் எவ்வளவு வெளிப்படுத்த முடியுமோ அதை விட அதிகமாகவே உன்னிடம் என்னைத் திறந்து காட்டியிருக்கிறேன். ஒரு படைப்பாளியாக இருக்கும் பட்சத்தில் அது எனக்கு சாத்தியமாயிருக்கிறது. ஒருவருக்கொருவர் ஒரே அலைவரிசையில் இந்த நிமிடம் வரை பயணிக்கிறோம் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. இன்னும் இது காதல்தான் என்று அறியாமல் இருக்கிறாயா? 

தொடுதல் மட்டுமே காதலாகுமா? தொடாமல் இருந்தால் அது நட்பாகவே பயணிக்கும் என்றும், தொட்டுக் கொண்டே இருப்பது காதலென்றும் உனக்குள் பதிவாகியிருக்கிறது. அதனால்தான் அது பற்றியான சில விஷயங்களை நீயே கூறினாய். நமக்குள் இருக்கும் தொடுதல் ஒரு கவிதையைப் போலானது. 

ஐந்தாம் பக்கம்

நட்பில் முத்தம் கொடுப்பது கூட இருக்கிறது. சலனமற்ற, சலசலத்துப் போகும் நீரோடை போலான நட்பில் அனைத்தும் இருக்கும். தொடக் கூட இல்லாத, நேரில் பார்க்காமலே கூட காதல் உச்சத்தில் இருக்கும். உனக்கு சில புரிதல்களைத் தருவது என் தலையாயக் கடமையென்று நான் நினைக்கவில்லை. எப்படியெல்லாம் நான் சிந்திக்கிறேன் என்பதின் வெளிப்பாடே இவை. 

இது நட்பைத் தாண்டிய உறவு என்பதை நீ உணரும் வரை காத்திருப்பேன். இந்த காத்திருப்பு சுகமும், வலியுமானது. எனக்கு ஒரு சேர வலியையும், சுகத்தையும் தர உன்னால் முடிகிறது. உன்னை விட்டு இன்னொருவர் மேல் ஈர்ப்பு வர வேண்டும் என்று நீ எதிர்பார்ப்பது நியாயமற்ற ஒன்று. முதல் காதல் எல்லாம் வெற்றி பெறுவதில்லை என்று வேதாந்தம் பேசுகிறாய். இது என் முதல் காதல் தான். நான் வெற்றி பெற்றவள்தான். நான் நேசித்தபடியே ஒருவன் இருக்கிறான் என்பது எனக்கு நிறைவைத் தருகிறது. 

யாருடனும் என்னை ஒப்பிடாதே. நான் உன்னை உலுக்கி எடுக்கும் அளவுக்கு, போட்டுத் தாக்கும் அளவுக்கு நெருங்கவில்லை என்பதுதான் உன் நட்பின் எல்லை தாண்டாத காரணமா? நான் எதிர்பார்ப்பது இந்த தூய நட்பினூடாக பயணப்படும் காதலை.

ஆறாம் பக்கம்

கோபத்தில் உள்ள அன்பையும், மௌனத்தில் உள்ள வார்த்தையையும் யாரால் உணர முடியுமோ அவர்களே உனக்காக படைக்கப்பட்டவர்கள் என்று சொல்லும் கூற்று உண்மையெனில் நீ அந்த தகுதி உடையவன்தானே. இது காதல் தான் என்பது உனக்குப் புரியவில்லை. அதை புரிய வைக்க நானும் முயலவில்லை. உன்னை என் உறவு அசைத்துப் போட்டிருக்கிறது என்பதை நீயே ஒப்புக் கொண்டாய். சாதாரண ஒரு நட்பு இந்த அளவுக்கு உன்னைத் தாக்குமா? உடலையும் , மனதையும் ஆட்டி படைக்குமா? அடுத்த நொடியின் அசைவினை அறிந்து கொள்ள ஆவல் படுமா? இதற்கெல்லாம் என்ன பதில் வைத்திருக்கிறாய்? 

ஏன் அடுத்த பரிணாமத்தை நினைத்துப் பயப்படுகிறாய்? எனக்குப் புரியவில்லை. நடந்தே அறியாத பாதையில் முள் குத்தினால் என்ன செய்வது என்று அந்த பயணத்தை துவக்காமல் இருப்பதில் என்ன மாற்றம் நிகழ்ந்து விடக் கூடும்? எதையும் உனக்கு புரிய வைக்கப் போவதில்லை. அனைத்தும் புரிந்தவன் நீ. எப்போது நான் இல்லாமல் உன்னால் இருக்க முடியாது என்ற நிலை வருகிறதோ அப்போது தேடி வருவாய்.. அந்நேரத்தில் உலகத்தின் ஏதாவதொரு மூலையில் இருப்பேன் என்று எழுத ஆசையாகத்தான் இருக்கிறது. ஆனால் அதுவரை நான் இருப்பேனா என்றுதான் தெரியவில்லை. அதாவது மீண்டும் பழையபடி எதிர்மறையாக சிந்திக்கிறேன் என்று நினைத்து விடாதே.. இதே மனநிலையில் அப்போது இருப்பேனா என்றுதான் கேட்க வந்தேன். 

ஏழாம் பக்கம் 

காதலென்றால் அத்து மீறுவதுதானா? அத்து மீறுவதுதான் காதலாக இருக்க முடியுமா? நட்பு எப்போதுமே அத்து மீறாமலிருக்குமா? இந்த கேள்விக்குள் பல விஷயங்கள் புதைந்திருக்கிறது. நட்பு எனும் பெயரில் நீடிக்கும் சில கட்டற்ற உணர்வுகளும், காதல் எனும் பெயரில் அழகாய் பூத்திருக்கும் நட்பின் பரிமாணத்திற்கும் வேறுபாடுகள் இருக்கவே செய்கின்றன.

இந்த நட்பின் பரிமாணம் உச்சியைத் தொட்டிருக்கிறது. இதிலிருந்து நாம் வேறொரு பரிமாணமான காதலில் பயணப்படும் போது அது நட்பைப் போலவே வேறு ஒரு உச்சத்தைத் தொடுமா? அல்லது சிறு சிக்கலால் அது காதலையும் இழந்து நட்பையும் தொலைக்க வேண்டியிருக்குமோ? என்பது உன் பயமாக இருக்கிறது. அறிந்திடாத ஒன்றைப் பற்றி எப்படிக் கருத்துக் கூற முடியும்? இவையெல்லாம் உன் வாதங்களாக, கேள்விகளாக இருக்கின்றன. எனக்கும் இதற்கு பதில் தெரியவில்லைதான். இருந்த போதும் எனக்கொரு கேள்வி. இப்போதிருக்கும் நட்புக்கும், அதன் அடுத்த கட்டமான காதலுக்கும் என்ன வேறுபாடு இருக்கப் போகிறது என்பதை நீ தெளிவுபடுத்து. அன்பு என்பது எந்த நிலையிலும் மாறாமல் இருப்பது. மாறிக் கொண்டே இருப்பது அன்பாகாது. அன்பை வெளிப்படுத்தும் விதங்கள் மாறலாம். ஆனால் அன்பு மாறாது. என்னுடைய அதிக பட்ச புரிதல் நட்பும், காதலும் சிறிய வேறுபாடுடையது. அது தொடுதலாலனது. ஆனால் இதை ஏற்றுக் கொள்ள முடியாது. 

‘‘ தொட நினைத்து தொடாமல் பேசுவது காதல்
  தொட நினைக்காமலே தொட்டு பேசுவது நட்பு ’’
இந்த வார்த்தைகளில் எனக்கும் உடன்பாடு உண்டுதான். ஆன போதும் எனக்கு நிறைவளிக்கும் வார்த்தைகள் அல்ல இது. 

எட்டாம் பக்கம்

அந்த வகையில் வேறு ஏதேனும் உப்புச் சப்பில்லாத காரணங்கள் சொல்லாமல் இந்த காரணத்தை சொன்னதற்காக உன்னைப் பாராட்டுகிறேன். என் பயணத்தில் நோக்கம் ஏதுமின்றியிருந்தது. உன்னைச் சந்தித்த பின் சில நோக்கங்களைக் கற்பித்துக் கொண்டேன். எனக்கும் கூட இந்த உறவு நிலை பிடித்துதான் இருக்கிறது. ஒவ்வொரு அசைவுகளையும் இருவரும் பகிர்ந்து கொள்ளும் பாசாங்கற்ற வெளிகளில் நமக்கான எல்லா சுதந்திரமும் இருக்கிறது. இதை இழக்க விரும்பவில்லை என்பது இருவரின் முடிவாக இருக்கிறது. 

ஆனால் உனது முடிவில் இன்னொரு விஷயத்தையும் கவனித்தாக வேண்டும். எனது நோக்கம், எனது விருப்பம், எனது தேவை இவையனைத்தையும் ஒதுக்கிவிட்டு ஒன்றை மட்டும் கவனித்துப் பார். இந்த நட்பு காதலாகும் போது என்ன சுவையிருக்கும்? என்பதை உன்னால் உணர முடியவில்லை என்கிறாய். ஆனால் நான் ஆரம்பத்திலிருந்து உன்னுடன் அப்படித்தான் பயணப்பட்டிருக்கிறேன். அதை விடு. இந்த நட்பின் சுவைக்குள் காதலின் வேர் இருக்கிறது என்பதை உன்னால் உணர முடியவில்லை. ஏனெனில் காதல் எது? நட்பு எது? என்பதை புரிந்து கொள்வதில் இருவருக்கும் வேறுபாடு இருந்து வருகிறது. இது ஒன்று. இன்னொன்று நாளை நீ வேறொரு வாழ்வைத் தேர்ந்தெடுக்கும் போது எனக்களிக்கப் பட்ட இடத்தில் பாதியை நீ பகிர்ந்தளிக்க வேண்டியிருக்கும். இப்போது இருக்கும் பரிமாற்றங்கள் குறையும். பரிமாற்றம் குறைவதாலயே நட்பு இல்லை என்று ஆகிவிடுமா? மாற்றங்கள் இயல்பானது தானே என்பது உன் கேள்விகளாக இருக்கலாம். 

நிச்சயமாய் இப்போது இருக்கும் நிலை அப்போது கண்டிப்பாக இருக்காது. இரவுகளில் நெடுநேரம் நீ எனக்காகவும், நான் உனக்காகவும் விழித்திருப்பது. ஒன்றாக சேர்ந்து திரைப்படம், பூங்கா, கடற்கரை என்று செல்வது சாப்பிட்டாயா? தூங்கினாயா? என்ன செய்கிறாய்? இந்த கவிதை எப்படியிருக்கிறது? என்ற பரிமாற்றத்திற்கான பாதை இவையெல்லாம் தடைபடும். அடைபடும். 

ஒன்பதாம் பக்கம்

இந்த இழப்புகளை உன்னால் ஏற்றுக் கொள்ள முடிந்தால் என் மீதான உன் நேசம் வலுவானதல்ல என்பது தெளிவாகும். அல்லது இந்த மாற்றங்களை ஏற்க முடியாது போனால் இது வெறும் நேசமல்ல என்பதும் இதனூடாகவே இருவரும் பிணைக்கப்பட்டிருக்கிறோம் என்பதும் புரியும். 

என் சிந்தனைகளில் உன்னை நிறைத்துக் கொண்டு வேறொரு வகையில் பயணத்தைத் தொடர எனக்கு வலு கிடையாது. அதற்கு அவசியமுமில்லை. உன்னை வற்புறுத்தி என் காதலை திணித்து என் பாதைக்கு உன்னை இழுக்கும் விருப்பம் துளியும் இல்லை. அதை நான் ஏற்கவும் மாட்டேன். எந்த வகையிலும் உன்னைக் காயப்படுத்திடவும் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். 

நான் உனக்கு தகுதியானவளா என்பதும் எனக்கு தெரியாது. ஆனால் எனக்கு நீ தகுதியானவன் என்றே நினைத்திருந்தேன். அதனால் தான் என் படைப்பின் வழியெங்கும் உன் நிழல் பட்டே என் வார்த்தைகள் பூக்கிறது. மணம் பரப்புகிறது. நான் நீ சொல்வதையெல்லாம் சரியென்று ஏற்றுக் கொண்டு வேறொரு பயணத்தைத் தொடர முடிந்தால் இதுவரை நீண்ட உன்னுடனான எனது பயணமும், உனக்காகவே எழுதப்பட்ட, உன்னாலே எழுப்பப்பட்ட என் படைப்புகள் அனைத்தும் போலித்தன்மை உடையதாக மாறி விடும். இதற்கு ஒரு போதும் இடம் கொடுக்கா மாட்டேன். ‘தாய்மை’ என்ற ஒன்றைத் தவிர நான் இந்த உலகில் வேறெதையும் பெற விரும்பவில்லை. 

பத்தாம் பக்கம்

என் அகராதியில் காதல் என்பது உச்சபட்ச நட்பு.. நல்ல நட்பு எல்லா இடத்திலும் காதலாக மலர்ந்து விடுவதில்லை. கடல் முழுவதும் மழை பொழிகிறது. எல்லா துளிகளும் முத்தாகி விடுகிறதா? உப்பாகத்தானே போகிறது. நான் முத்தெடுத்து விட்டேன். இனி அதை ஆபரணமாக அணிவதில்தான் எனக்கு சிக்கலே ஒழிய வேறெதுவும் இல்லை. இப்போதும் சொல்கிறேன். உன் மனம் மாற வேண்டும் என்பதற்காக எழுதுவதாக நினைத்து விடாதே. எப்போதும் போலான என் சிந்தனைகளின் வெளிப்பாடே. 

இந்த வலியை என்னால் தாங்கிக் கொள்ள முடியவே இல்லை. உடலை ஆக்கிரமித்த வலி ஒரு சில நிமிடங்களில் விலகிப் போகும். உள்ளத்தை ஆட்கொண்ட வலி மண்ணோடு போகும் போது அறுத்துக் கொண்டே இருக்கும். இதில் உனக்கு எந்த பங்கும் இல்லை. நீ நீட்டிய நட்பின் கையை நான் என் காதலின் கை கொண்டு பிடித்துக் கொண்டது என் தவறுதான். உன் மீது எந்த தவறும் இல்லை. 

ஆனால் இதை விதையாயிருக்கும் போதே கிள்ளி எறிந்திருந்தால் வலியும் குறைந்திருக்கும். வந்த சுவடும் மறைந்திருக்கும். வேர் விட்டு விழுதும் கண்ட பின் சொல்கிறாய்.. என்ன செய்ய? வெட்டி எறிய முடியவில்லை. அப்படியே புதைக்கவும் முடியவில்லை. நான் புதைந்தால் ஒழிய இந்த எண்ணங்கள் புதையப் போவதில்லை. ஆனால் இந்த பயணம் நீடிக்கும். என்னைப் பொறுத்தவரை உன்னை விட்டு விட்டு எனக்கு வேறொன்றை சிந்திக்க முடியாது. அதற்கு பலமில்லை. உனக்கு அந்த பலம் இருக்கிறது என்பது உன் பேச்சில் தெரிகிறது. எதுவரை உனக்கும் எனக்கும் தடையில்லையோ அதுவரை பயணிப்போம். 

என் சின்னஞ்சிறிய இறகுகளில் நீ ஓவியம் வரைந்து கொள்ளலாம். உன் புன்னகையெல்லாம் கோர்த்து நான் மாலையாக்கிக் கொள்ளலாம். எதற்கும் தடையில்லை. இறுதியாக ஒன்று. இதுவரையான பயணம் உன்னைப் பொறுத்தவரை நட்பாகவும், என்னைப் பொறுத்தவரை காதலாகவும் பயணப்பட்டிருக்கிறது. 

இனி காலம் அந்த நேசத்தின் பயணத்தை முடிவு செய்யட்டும். அதுவரை சிறகடிப்போம் எப்போதும் போல் புன்னகயோடு..

பின்குறிப்பு:

உனக்கு இதையும் கடந்து வேறு ஏதோ காரணம் இருக்கிறது என்று ஆழ்மனம் சொல்கிறது. அதை மறைக்கிறாய். இதை விட வேறு காரணம் ஒன்றை யோசி. ஆனால் இவ்வளவு விஷயங்களை சொல்வதற்கு எனக்கு தகுதியில்லை என்பதையும் நானறிவேன். 

மீளா துயருடன் 
இவள் 
READ MORE - காதல் எது? நட்பு எது?

பூமியும் காதலும் வேறானதல்ல

திங்கள், 1 மார்ச், 2010

காதலைப் பற்றியே பேசுவதாக சிலர் சலித்துக் கொள்கிறார்கள். எல்லோருக்கும் தெரிந்த ஒன்றைப் பேசுவதில் தவறென்ன? காதலைப் பற்றி பேசும் போது எங்கும் தொடங்கி எங்கும் முடிக்கலாம். எங்கும் முடித்து எங்கும் தொடரலாம். காதலுக்கு விளக்கம் சொல்ல யாராலும் முடியாது. பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் என்பதைப் போல உணர்வுகளும் பலவிதம் அவை ஒவ்வொன்றும் ஒருவிதம். காதல் என்பது இருவர் மட்டுமே விளையாடக் கூடிய விளையாட்டுத் திடல். காதல் என்பது இருவர் மட்டுமே உலவுக்கூடிய வெளி. காதல் என்பது இரு முரண் கொண்ட மனங்களின் சேர்க்கை. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். 

காதல் என்பது ஒரு ஆண் பெண்ணிடத்திலோ, ஒரு பெண் ஆணிடத்திலோ வைப்பது மட்டுமல்ல. ஒரு தாய் தன் குழந்தைகளிடத்தும், ஒரு சகோதரன் தன் சகோதரியிடத்தும் காட்டும் அன்பைக் கூட காதல் என்ற சொல்லில் குறிக்கிறது மேற்கத்திய கலாச்சாரம். அந்த தாக்கத்தின் வெளிப்பாடு நம்மவர்களிடம் இருக்கவே செய்கிறது. தமிழில் இரண்டு பேருக்கான அன்பை பல சொற்களால் குறிக்கிறோம். தமிழைத் தவிர வேறு மொழியில் இவ்வாறான போக்கு இருப்பது கூட அரிதுதான். பெற்றோர் பிள்ளைகளிடத்து வைத்திருப்பது அன்பு, சகோதரி சகோதரியிடத்து காட்டும் அன்பு பாசம், நண்பர்கள் தோழிகளுக்கிடையே இருப்பது நட்பு, தொழிலாளி முதலாளியிடத்து கொண்டிருக்கும் நேசம் விசுவாசம், குடிமகன் தன் நாட்டின் மீது கொண்டிருக்கும் அன்பு தேசப்பற்று இப்படி பலவிதமான சொற்களால் அன்பினை குறிக்கிறோம். இது தமிழுக்கே உரிய சிறப்பு. 

வீழ்ச்சிதான் எங்கும் மகிழ்ச்சியான விஷயம். மலையிலிருந்து விழும் நீரின் வீழ்ச்சிதான் அருவி. மேகத்திலிருந்து விழும் நீரின் வீழ்ச்சிதான் மழை. செடியிலிருந்து விழும் இலைகளும், பூக்களும்தான் உரம். இப்படி வீழ்ச்சிதான் எங்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது. காதலில் வீழ்வதும் மகிழ்ச்சியான விஷயம். காதலில் வீழ்த்துவதும் கூட. 

‘காதலுக்கு காரணம் இருக்க முடியாது. காரணம் இருந்தால் அங்கு காதல் இருக்க முடியாது’ என்று ஷேக்ஸ்பியரின் வார்த்தைகளை ‘இயற்கை’ படத்தில் இயக்குனர் ஜனநாதன் பயன்படுத்தியிருப்பார். அது ஒரு வகையில் உண்மையாக இருந்தாலும் அதாவது காதல் முளைப்பதற்கு அது தொடக்கமாக இருந்தாலும் பின் அது தொடர்ந்து வளர்வதற்கு நிச்சயம் காரணம் இருக்கவே செய்யும் அல்லது அந்த காதல் சில பல காரணங்களைக் கற்பித்துக் கொள்ளும். ஒரு விதை எங்கும் விழலாம். அது மண்ணைப் பொறுத்தும், அதன் வளத்தைப் பொறுத்துமே விருட்சமாவதற்கான வேலைகள் நடைபெறும். காதலும் எந்த காரணமும் இல்லாமல் வரலாம். அது தொடர்ந்து நிலைக்க சில காரணங்களை பிற்பாடு கற்பித்துக் கொள்ளும். காதல் விட்டுக் கொடுப்பது மட்டுமல்ல. அப்படியே ஏற்றுக் கொள்வதும் கூடதான். 

நாம் இங்கு பேச இருப்பது இரு மனங்களுக்கிடையேயான காதல் மட்டும் என்று ஒரு குறுகிய எல்லையை வரையறுக்க விரும்பவில்லை. யாரும் எந்த காதலைப் பற்றி பேசவும் கட்டுப்பாடு ஏதுமில்லை. காதல் கட்டுப்பாடுகளற்றது. ஆனால் கட்டுக்குள் வைக்கக் கூடியது. காதல் ஒரு காற்று யாரும் சுவாசிக்காமல் இருக்க முடியாது.

‘அணுஅணுவாய் சாக 
முடிவெடுத்தபின் காதல் 
சரியான வழிதான்’
என்ற கவிஞர் அறிவுமதியே தன்னுடைய கட்டுரை ஒன்றில் 
‘அணுஅணுவாய் வாழ
முடிவெடுத்தபின் காதல் 
சரியான வழிதான்’
என்றும் சொல்லியிருக்கிறார். 

தோற்கிற இடத்தில்தான் காதல் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்றும் வெற்றி பெறுகிற காதலில் காதல் தொலைந்து போகிறது அல்லது பலவீனமாகி விடுகிறது என்றும் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. காதலில் தோற்று வலியுடன் வாழ்க்கையில் சாதிப்பதை விட வெற்றி பெற்று சந்தோஷத்துடன் சாதிப்பதே பெருமைக்குரியது. தோல்வியடைவதற்காக யாரும் காதலிப்பது கிடையாது. வெற்றி பெறத்தான் அது துடிக்கிறது. அம்பிகாபதி - அமராவதி, ரோமியோ - ஜூலியட், லைலா - மஜ்னு இவர்களை விட சிறந்த காதல் ஜோடியாக காரல் மார்க்ஸையும் ஜென்னியையும் பார்க்கிறேன். காரல் மார்க்ஸின் மூலதனத்திற்கு காதல் உந்துசக்தியாகத்தான் இருந்ததேயொழிய உறுத்தலாக இல்லை. மூலதனம் என்று உலகமே கொண்டாடும் அரிய பொக்கிஷத்தை தந்த மார்க்ஸின் கடும் உழைப்பிற்குப் பின்னால் கண்ணுக்குத் தெரியாத நூலிழையாக இருப்பது ஜென்னியின் காதல். ஆதலால் காதலில் வெற்றி பெறுவது இன்னுமாய் சாதிக்க வைக்கும். 

‘கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால்
மண்ணில் குமாரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்’  
- என்ற பாரதிதாசனின் கூற்று மார்க்ஸ் - ஜென்னியின் காதலில் மெய்ப்பிக்கப்பட்ட ஒன்றாகவே நான் அறிகிறேன். 

காதல் அடிமைப் படுத்தும் என்பதை விட அடிமைப் பட்டுக் கிடக்கத் தயாராயிருக்கிறது. காதலில் அடிமைப் பட்டுக் கிடப்பதும் அதீத சுகம்தான். காதல் சாதிக்கத் தூண்டும். சகலத்தையும் ரசிக்கத் தூண்டும். எல்லாவற்றிலும் அழகைப் பார்க்கும். அனைத்தின் மீதும் அன்பைப் பொழியும். 

‘காதல் காதல் காதல் 
காதல் போயின் காதல் போயின் 
சாதல் சாதல் சாதல்’ 
- மகாகவியின் இந்த வார்த்தைகள் அவ்வளவு நிதர்சனமானது. காதல் போனால் சாதல் தான். அந்தக் காலத்திலிருந்து இந்த காலம் வரை இதைக் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். எந்தளவுக்கு காதல் சுகமானதோ அந்தளவுக்கு வலியானதும் கூட. காதல் வாழ்வையும், சாவையும் ஒரு சேர ஒரே தட்டில் ஏந்தி வந்து அள்ளித் தின்னச் சொல்லும். அதிலும் சொல்லாத காதலின் வலி காதலைச் சொல்ல முடியாமல் தவிக்கும் உள்ளத்தால் மட்டுமே உணரக் கூடியது. காதல் கொண்ட இதயத்திற்கு எப்போதும் பசித்துக் கொண்டே இருக்கும். அத்துடன் பசி மறந்தும் இருக்கும். 

காதல் இரகசியமானது மட்டுமல்ல.. அவசியமானதும் கூட.
காதல் பொறாமைப் படும்.. பெருமைப் படும்.
காதல் தன்னை வசமிழக்கச் செய்யும். வசியப்படுத்தவும் செய்யும். 

காதல் தான் நேசித்த உள்ளத்தை ஒரு போதும் காயப்படுத்தாது. இப்போது நடக்கக்கூடிய சில நிகழ்வுகள் வன்முறையைக் கையில் எடுத்துக் கொண்டும், நேரத்தைப் போக்கிக் கொள்வதுமாக இருக்கிறது என்பதை நாமறிவோம். நேரத்தை வீணாக்கக் கூடிய காதல் தானும் வீணாகும். நேரத்தை ஆக்க வழியில் செலவு செய்யும் காதலே உண்மையாக உறுதியாக இருக்கும். இதில் செலவழிக்கும் நேரமும் முதலீடாகவே கருதப்படும். அதற்காக அலுவலக வேலையை அந்த நேரத்தில் உட்கார்ந்து செய்வது என்று பொருளல்ல. தன்னை உணர்வது, தன்னைத் தருவது, ஊக்கப்படுத்துவது, உற்சாகப்படுத்துவது என்று காதல் தன் நேரத்தை சரியான முறையில் செலவு செய்யும். அப்படி செய்வது அமரத்துவமான காதல். ஆக்கப்பூர்வமான பாதையில் செல்லக் கூடிய காதல். 

முதலில் புற அழகைக் காணக் கூடிய காதல் சில நாட்களில் உள்ளழகைக் கண்டு தெளிந்து அகவயப்பட்டு தொடரும் போதுதான் அது நிலைத்து நிற்கும். அழகு என்பது ஆளாளுக்கு மாறுபடும். யாரார் மீது அன்பு செலுத்தப்படுகிறதோ அவர்கள் எல்லோரும் அழகாகவே தெரிவார்கள். அழகு என்பது அன்பின் வெளிப்பாட்டில் அறியப்படுவதுதான். ஆனால் காதல் கொண்ட உள்ளம் தானே அனிச்சையாய் அழகாகி விடும். ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பது காதலுக்கு சரியாகப் பொருந்தக் கூடியது. அகத்தில் நுழைந்த அழகான காதல் அந்த முகத்தையும் அழகாக்கி விடுகிறது. 

‘காதலுக்கு கண்ணில்லை’ என்பது அனைவரும் சொல்லக்கூடிய ஒன்று. ஆம். அதற்கு கண்கள் இல்லைதான். குறைகளை பெரிதுபடுத்திப் பார்க்கும் கண்கள் இல்லைதான். காதல் என்பது திருமணத்திற்குப் பின் குறைந்து விடுவதல்ல. இன்னும் சொல்லப்போனால் காதலை வெளிப்படுத்த அப்போதுதான் அதிகப்படியான சுதந்திரமும், வெளியும் கிடைக்கிறது. அதனால் திருமணத்திற்குப் பிறகு அது அதிகரிக்க வேண்டுமேயொழிய குறையக்கூடாது. 

ஒரு தொலைக்காட்சித் தொடருக்கான விளம்பரத்தில் ஒரு அழகான கவிதையை பயன்படுத்தியிருந்தார்கள். 
‘என் ஆயுள் உள்ளவரை 
உன் காதல் வேண்டும்
இல்லையெனில்
உன் காதல் உள்ளவரை
என் ஆயுள் போதும்’ - மிக அழகான கவிதை காதலைப் போலவே. காதல் எல்லா இடத்திலும் நீக்கமற நிறந்திருக்கிறது. 

காதல் ஒன்றில் தான் உயிர்கள் இயங்க முடியும். பூமியில் மட்டும்தான் உயிர்கள் வாழ முடியும். பூமியும் காதலும் வேறானதல்ல. இரண்டிற்குமே ஈர்ப்பு விசை உண்டு. பூமியிலிருந்து மேலே செல்ல செல்ல ஈர்ப்பு விசை குறையும். காதல் நாள் செல்ல செல்ல ஈர்ப்பைக் கூட்டும். அத்தனை கோள்களிலும் பூமி மட்டுமே உயர்வானது. அத்தனை உணர்வுகளிலும் காதல் மட்டுமே சிறப்பானது. 

இப்படிக் காதலைப் பற்றி பேசுவதென்றால் மணிக்கணக்காக, நாட்கணக்காக அல்ல யுகம் யுகமாய் பேச விஷயங்கள் இருக்கிறது. காதலைப் பாடாத கவிஞர்களே இல்லை என்று சொல்வதை விடவும் காதலைப் பாடியே கவிஞர்கள் ஆனவர்கள் அதிகம் எனலாம். இங்கும் காதலைப் பாட திரண்டிருக்கும் கவிஞர்களுக்கு வணக்கம் கூறி முதலாவதாக காதல் பற்றி தன் கவிதையைப் பதிய நாம் அழைப்பது பொடியனை...

READ MORE - பூமியும் காதலும் வேறானதல்ல

பொடிசியின் கடிதம்

புதன், 10 பிப்ரவரி, 2010

அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
அவள் இப்படி ஒரு முடிவை எடுப்பாளென. அவள் எழுதிய கடிதத்தை மீண்டும் ஒருமுறை படிக்கத் துவங்கினான். கடிதத்தின் வலது ஓரத்தில் எழுதப்பட்டிருந்த அவள் அடிக்கடி அவனைச் செல்லமாக அழைக்கும் அந்த வார்த்தையை அவனது பெருவிரல் தானே தடவியது.

நேசமிக்கப் பொடியனுக்கு,
எதேச்சையாய் எப்படி நமது சந்திப்பு நிகழ்ந்ததோ அதைப் போலத்தான் உன் மீதான ஈர்ப்பும் எனக்குள் சடாரென விழுந்தது. திடீரெனக் கொட்டிப் போகும் மழையைப் போலான உன் வருகை எனக்குள் மகிழ்விற்கான விதைகளையும், வாழ்வதற்கான நம்பிக்கைகளையும் துளிர்க்கச் செய்தது. நாட்களாக ஆக எந்த கணத்தில் அது காதலாக அல்லது அதையும் கடந்த ஒன்றாக உருமாறியதென சொல்லத் தெரியவில்லை. ஆனால் உன்னை நினைத்திருக்கும் நொடிகள் தோறும் பரவசமடைந்திருக்கிறேன். உன்னிடம் பேசும் இரவுகள் தோறும் பாதுகாப்பை உணர்ந்திருக்கிறேன். என்னைப் போலவே சிந்திக்கும் ஒருவனை, என்னை விட மேலாக புரிதல் உள்ளவனை சந்தித்த சந்தோஷம் எனக்குள் இன்று வரை ஒவ்வொரு நாளும் இருந்து வந்திருக்கிறது. இனியும் இருக்கும். உன்னைச் சந்தித்த நாளிலிருந்து ஒருநாள் கூட பேசாமல் இருந்ததில்லை. அப்படி இருக்க முடிந்ததில்லை. சிலந்தி தன் எச்சிலால் பின்னிய வலையில் ஒளி பட்டு மின்னுவதைப் போல என் நேசம் ஜொலித்ததை என்னால் அனுபவிக்க முடிந்தது. என்னைப் போலத்தான் நீயும் இருப்பாயா என தெரிந்து கொள்ள முடியவில்லை.

ஒரு பெண் தன் நேசத்தை முதலில் தான் நேசிக்கும் ஆணிடம் வெளிப்படுத்துவது என்பது நமது சமூகத்தில் இயல்பான ஒன்றாகப் பார்க்கப் படுவதில்லை. ஒருவேளை தனது நேசம் நிராகரிக்கப்படும் கனத்தை எதிர்கொள்ளும் தைரியம் இல்லாது இருக்கலாம். ஆன போதும் எனது பேச்சுக்களின் வழி, குறுஞ்செய்திகளின் மூலம் அவ்வப்போது உன்னை அதிகம் நேசிப்பதை வெளிப்படுத்தியே இருக்கிறேன் என்பதை நீயுமறிவாய். ஆயினும் ஒருமுறை கூட நான் எதிர் பார்த்திருக்கும் வார்த்தைகள் உன்னிலிருந்து உதிக்கவே இல்லை. இருந்த போதிலும் உன் மீதான நேசம் உதிர்ந்து போய்விடவில்லை.

                                             முக்கிய அன்றாடச் செயல்பாடுகள் ஒவ்வொன்றாய் கூறத் துவங்கி உன்னிடம் சொல்லாமல் எதுவும் செய்வதில்லை என்ற நிலை வந்தது. கடந்த ஆறு மாதங்களில் இடையிடையே ஓரிருமுறை சண்டையிட்ட இரவுகளைத் தவிர ஓரிரவு கூட நாம் பேசாமல் இருந்ததில்லை. ஆயிரமாயிரம் விஷயங்களை பகிர்ந்திருக்கிறோம். நமது நள்ளிரவுப் பேச்சுக்களுக்கும், அவ்வப்போதான சந்திப்புகளுக்கும் நிலவும், இரவும், எந்திரப்பறவையுமே சாட்சிகளாயிருக்கின்றன. பகல் போதெனில் காக்கையும் கூட சாட்சி என்பதை நாமறிவோம். நீ அடிக்கடி சொல்வதுண்டு, நேர்மறையாகச் சிந்திக்க வேண்டுமென்று.

“நல்லவர்கள் கூட தோற்றுப் போகலாம்
  நம்பிக்கை உள்ளவர்கள் ஒருபோதும் தோற்பதில்லை” என்ற பொன்மொழியின் சாராம்சத்தை உள்ளடக்கியிருக்கும் உனது பேச்சு. அந்த எண்ணத்தில்தான் நானும் இருந்தேன். உன்னோடு இத்தனை நாட்கள் வெறும் பேச்சோடு மட்டும் நெருங்கியிருக்கிறேன் என்று நீ நினைக்கலாம். நான் அப்படி நினைக்கவில்லை. உன்னைப் பொறுத்தவரை வார்த்தைகள் வெறும் எழுத்துக்களின் கூட்டாக இருக்கலாம். என்னைப் பொறுத்தவரை வார்த்தைகள்தான் வாழ்க்கை.

 எனக்குப் பிடித்த எல்லாம் உனக்குப் பிடிக்க என்னை மட்டும் ஏன் பிடிக்காமல் போனது? என்று திரைப்படப்பாடல் ஒன்று வரும். அதுபோல் நிகழ்ந்து விடுமோ என பயந்ததுண்டு.  நெருங்கியும் நெருங்காமலும் எப்படியோ உன் பயணம் எனக்குள் துவங்கிவிட்டது. உன்னைப் பார்க்க வேண்டுமென நினைத்தால் நிழற்படம் இருக்கிறது. பேச வேண்டுமென்றால் உடனே பேசி விடுகிறாய் அல்லது நானே எனக்குள் உன்னிடம் பேசிக் கொள்கிறேன். எதைப் பற்றியும் எந்த நேரத்திலும் ஆலோசிக்க முடிகிறது. வேறென்ன வேண்டும் உன்னிடமிருந்து எனக்கு?

எல்லா ஆண்களைப் போலான சராசரிக் கண்ணோட்டம் உனக்கு இல்லை. ஆனால் எல்லாப் பெண்களையும் போல சராசரிக் கனவுகள் எனக்கு இருக்கிறது. மூடநம்பிக்கை வேரூன்றிய சமூகத்தின் பின்புலத்திலிருந்து வந்த நான் பகுத்தறிவின் பாதையில் சமீப காலமாகத்தான் நடைவண்டி பயில்கிறேன். நீயோ பகுத்தறிவே பின்புலமாகக் கொண்டு வளர்ந்தவன். என்னைவிட எதையும் ஆழமாக யோசித்து செயல்படும் திறனுண்டு உனக்கு. இதையெல்லாம் ஏன் இப்போது சொல்லத் தோன்றுகிறது என தெரியவில்லை.

ஒவ்வொரு முறையும் உன்னிடம் என் நேசத்தை வெளிப்படுத்த முயன்று தோற்றுப் போய் திரும்பியிருக்கிறேன்.  பெரும்பாலான சமயங்களில் நீ பேசும் போது நட்பின் எல்லை கடந்து பேசியதில்லை. நானோ அதையும் கடந்தே உன்னிடம் பழகி வருகிறேன். நானும் ஒவ்வொரு நாளும் இப்போது சொல்வாய், அப்போது சொல்வாயென காத்திருந்து சோர்ந்து விட்டேன். நீ பொறுமை பெரிதென்று சொல்வாய். ஆனால் பொறுமைக்கும் எல்லை உண்டல்லவா?

எதுவும் காலத்தோடு பயிர் செய்யப்பட வேண்டும். காலம் கடந்தால் எந்த ஒரு உதவியும்கூட பயனற்றதாகி விடும். எனவே இவ்வளவு நாட்களில் உன்னிடம் இருந்து வெளிப்படாத என் மீதான உன் நேசம் இனிமேலும் வெளிப்படுமா என்று தெரியவில்லை. ஒருவேளை நான் வெளிப்படுத்தி நீ நிராகரித்தால் அதைத் தாங்கிக் கொள்ளும் திறனும் என்னிடமில்லை. ஆனால் உன்னை நேசித்துக் கொண்டே இருப்பேன் என் காலம் கடந்த பின்னும் என் எழுத்துக்களில். நான் உன்னை நேசித்து வந்திருக்கிறேன் என்பதை அறிந்து கொள். இப்போதிருக்கும் சந்தோஷத்துடனே போகிறேன். எப்போதும் சந்தோஷமாக இரு. அதுவே என் ஆயுளின் வேண்டுகோள். என் வேண்டுகோளைக் கட்டளையாக்கிச் செல்கிறேன் பொடியா...
                                                               இப்படிக்கு - நேசமிக்க பொடிசி.
பின்குறிப்பு:
இந்தக் கடிதம் உனக்கு எப்போது கிடைக்குமென்று தெரியாது. உன்னிடம் கிடைக்கும் போது நான் இருப்பேனா என்றும் தெரியாது. ஆனால் என் நேசிப்பிற்குரியவன் நீ என்பதை சொல்வதே இந்த கடிதத்தின் நோக்கம். சந்தோஷமாக இரு. நான் விரும்புவது அதைத்தான்.

கடிதத்தை படித்து முடிக்கும்போது கண்களின் ஓரங்களில் கண்ணீர் துளிர்த்தது அவனுக்கு. “ ஏன் இப்படி நடந்து கொண்டாய். உன் மீது நேசமின்றியா நீ சொல்வதற்கெல்லாம் தலையாட்டினேன். நீ விரும்பும்போதெல்லாம் பேசினேன். நீ நினைத்த போதெல்லாம் உன்னை வந்து சந்தித்தேன். நீ கொடுத்த பரிசுகளை ஏற்றுக் கொண்டேன். ஏன் இதை புரிந்துகொள்ளவில்லை பொடிசி. உன் சந்தோஷம்தான் நான் காணும் சந்தோஷம் என்று சொல்லியிருக்கிறேன். அதைக் கூட உணரவில்லையா? விளையாட்டாய் சில சமயங்களில் பேசுவதை வினையாக எடுத்துக் கொண்டு இப்படிச் செய்து விட்டாயே.. பொடிசி.. உன்னை ரொம்ப பிடிக்கும் பொடிசி..” என்று அவள் படுத்திருந்த கட்டிலின் அருகில் வாய்விட்டே புலம்பினான். இன்னும் என்னவெல்லாமோ சொல்ல எத்தனித்தவன் கரைகடந்த கண்ணீரால் பேச்சற்று நின்றிருந்தான்.

சிறிது நேரத்திற்குப் பின் உள்ளே நுழைந்த மருத்துவர், 'சிறிய காயம்தான். அதிர்ச்சியில் மயக்கம் வந்திருக்கிறது. சற்று நேரத்தில் சுயநினைவு வந்துவிடும்' எனக் கூறிவிட்டுச் செல்ல அவள் அருகிலேயே அமர்ந்திருந்தான்.

இன்று இரவு எட்டு மணிக்கு அலுவலகம் விட்டு இரு சக்கர வாகனமொன்றில் வீடு திரும்பியிருக்கிறாள். வரும் வழியில் சிக்னலில் ஏற்பட்ட விபத்தொன்றில் பலத்த அடியில்லை என்ற போதும் விழுந்த அதிர்ச்சியில் மயங்கியவளை அங்கிருந்த போக்குவரத்துக் காவலர்கள் மருத்துவமனையில் சேர்த்துவிட்டு செல்லில் இருந்த நம்பருக்கும், அவள் அலுவலக விசிட்டிங் கார்டில் இருந்த நம்பருக்கும் தகவல் தெரிவித்திருக்கின்றனர். முதலில் மருத்துவமனை வந்த தோழிதான் பொடிசியின் கைப்பையை அவன் வந்த பின் அவனிடம் கொடுத்திருக்கிறாள். அதிலிருந்து இரண்டு வாரங்களுக்கு முன் அவனுக்கு எழுதிய கடிதத்தைப் படித்துவிட்டுத்தான் அவளருகில் பதறிப் போய் நிற்கிறான் அவள் கண் விழிக்கும் தருணத்திற்காக..
READ MORE - பொடிசியின் கடிதம்

தேவதையும் செல்லக்குட்டியும்

வெள்ளி, 5 பிப்ரவரி, 2010

ரயிலுக்காய் காத்திருக்கிறாள் தேவதை ...
இன்னும் சற்று நேரத்தில் செல்லக்குட்டி வந்துவிடக் கூடும் ...
இரண்டு மாத பிரிவினை இருவரும் தாங்கிகொண்டதன் காரணம் செல்லக்குட்டி நிச்சயம் தேவதையுடன் சென்னையில் ஒன்றாய் தங்கப் போகிறார்கள் என்ற நம்பிக்கையே... ரயில் வரும் ஓசை தொலைதூரத்தில் கேட்க ஆவலுடன் எட்டிபார்த்து கொண்டிருக்கிறாள் தேவதை ..

செல்லக்குட்டியை உங்களுக்கு நிச்சயம் அறிமுகம் செய்தே ஆகவேண்டும் .அதுவும் தேவதையைப் பற்றி தெரிந்துகொள்ளும் முன்..
ஏனெனில் தேவதையின் எல்லாமுமாய் இருக்கும் செல்லக்குட்டிக்கு வயது இரண்டை தொட்டுக் கொண்டிருக்கிறது..செல்லக்குட்டி வீட்டுக்கு வந்ததிலிருந்து செல்லக்குட்டி இல்லாமல் தேவதை வெளியே செல்வதில்லை.. அந்தளவிற்கு இருவருக்கும் பிணைப்பு.. மழை , வெயில் என்று பாராமல் ஊர் சுற்றி வருவதில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களில்லை...

ஒருமுறை சென்னை சென்ற தேவதை செல்லக்குட்டியை வீட்டிலேயே விட்டு விட்டு போய்விட திரும்பி வரும் வரை அதன் வயிற்றுக்குள் ஒன்றும் இறங்க வில்லை.. ஒருவாரம் கழித்து திரும்பிய தேவதை முதல் வேலையாய் வீட்டிற்குள் வந்ததும் வராததுமாய் ஓடிப்போய் செல்லக்குட்டியை பார்த்தால் அது குற்றுயிரும் குலை உயிருமாய் கிடந்தது..மீண்டும் செல்லகுட்டி பழைய நிலைக்கு திரும்ப இரண்டு நாட்கள் ஆனது..அதிலிருந்து செல்லக்குட்டியை விட்டு ஒரு போதும் பிரிவதில்லை என்ற வாக்குறுதியினை தேவதை தனக்குதானே கொடுத்துக் கொள்ள வேண்டியதாய் இருந்தது..

செல்லக்குட்டியுடன் வெளியே செல்லும் தோறும் மற்றவர்களின் கவனம் இவர்கள் மீதுதான் பாயும்.. தேவைதைக்கு ஒரு பக்கம் சந்தோசம் என்றாலும் கூட இன்னொரு பக்கம் வருத்தமாய் இருக்கும். காரணம் பல நேரங்களில் செல்லக்குட்டிக்கு எதுவும் வாங்கிகொடுக்க முடியாத நிலைமை.

இரவு நேரங்களில் யாருமற்ற நெடுஞ்சாலையில் செல்வதென்றால் மார்பில் விழும் முதல் மழைத்துளியைப் போல் அவ்வளவு சுகமானது.. இருவரும் செல்கிற நீண்ட தூர பயணத்தில் ஏற்படும் சிறு சிறு தடங்கல்களும் இருவருக்கும் பெரிதாய் தெரிந்ததில்லை..

தேவதை வேலை நிமித்தமாய் மீண்டும் சென்னை செல்ல இந்தமுறை செல்லக்குட்டியை எப்படியாவது இரண்டொரு நாளில் அழைத்துப் போய்விட வேண்டும் என்ற எண்ணினாள். ஆனால் நினைத்தபடி எதுவும் நடக்க வில்லை.. ரயில் டிக்கெட் கிடைக்கவில்லை..மனிதர்கள் அன்ரிசர்வில் செல்வதே பெரும்பாடு..இதில் செல்லக்குட்டியை எப்படி கூட்டி செல்வது..? என்ன செய்வதென்று தெரியாமல் ஒருவாறு தேற்றி செல்லக்குட்டியை அடுத்தவாரம் அனுப்பி வைக்கும் படி வீட்டில் சொல்லிவிட்டு சென்னை கிளம்பினாள் தேவதை..

ஆனால் அது நினைத்தபடி நடக்கவில்லை..இதோ வந்துவிடும்..அதோ வந்துவிடும்.என்று எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்தபடியே இருந்தது..
தேவதை தங்கியிருந்த வீட்டில் உள்ளவர்கள் இன்னும் எதிர்பார்ப்புடன் இருந்தனர்..எப்பொழுதும் செல்லக்குட்டியை பற்றி வீட்டில் பேசிக் கொண்டிருந்ததில் தேவதையைக் காட்டிலும் மற்றவர்கள் செல்லக்குட்டியை பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலை வெளிப்படுத்தியபடி இருந்தனர்..
செல்லக்குட்டி தங்குவதற்கும் அந்த வீட்டில் ஏற்பாடு செய்தாயிற்று..ஆனால் செல்லக்குட்டிதான் வந்தபாடில்லை..

இரண்டு மாத முயற்சிக்குப்பின் இதோ செல்லக்குட்டியின் வருகை .. செல்லகுட்டி வந்திறங்கியது.. சாக்குப்பையினுள் தன்னை பாதி மறைத்து கொண்டிருந்தது செல்லக்குட்டி.. கவுண்டரில் பணம் கட்டிவிட்டு செல்லக்குட்டி மேல் சுற்றப்பட்டிருந்த சாக்கினை அகற்றி பார்த்தால் செல்லக்குட்டிக்கு முதுகில் ஒரு கீறலும் கழுத்தில் ஒரு தழும்பும் இருந்தது.. தேவதைக்கு கண் கலங்கி விட உடன் வந்திருந்த தேவதையின் சித்தப்பா ஒருவாறு தேற்றி இருவரையும் அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தார்...

கொஞ்சம் கொஞ்சமாய் தெளிவடைந்த செல்லக்குட்டி இப்போது தேவதையுடன் மீண்டும் பயணத்தை துவக்கியது.. அவள் எப்போது செல்லக்குட்டியை அழைத்தாலும் ஆசையை ஒட்டிக்கொள்ளும்.. அடுத்தவர் கை பட்டாலோ உயிரற்று கிடப்பது போல் தன்னை வெளிப்படுத்தும்..

தேவதை அலுவலகம் முடிந்து திரும்ப அன்று அதிகாலை மூன்று மணியாகி விட்டது.. இருப்பினும் அந்த நேரத்தில் செல்லக்குட்டியுடன் வீட்டிற்கு புறப்பட தயாரானாள். சாலையில் அவர்களை கடந்து செல்லும் வாகனங்கள் இவர்களை கவனிக்காமல் செல்லவில்லை.. செல்லக்குட்டிஎங்கும் நிற்காமல் சென்றது அந்த நாளில்தான்.. எந்த சிக்னலிலும் நிற்கவில்லை.. செல்லகுட்டி அரைமணிநேரத்தில் வீடு வந்து சேர்த்துவிட்டது.. அந்த அதிகாலை தூரலில் சில்லிட்டு நனைந்த செல்லக்குட்டியை துடைத்து விட்டு மாடிப்படிஏறினால் தேவதை.. செல்லக்குட்டியிலிருந்து வடிந்த தண்ணீர் மெது மெதுவாய் வெப்பத்தை குறைத்துவிட்டு குளிரத் தொடங்கியது..

தேவதை யாரிடமும் எப்போதும் வண்டி என்று சொன்னதில்லை செல்லக்குட்டியை ....
READ MORE - தேவதையும் செல்லக்குட்டியும்

அன்புள்ள ஆயிஷாவிற்கு..

தோழி எப்படி இருக்கிறாய்?
உன் பிள்ளைகள் எப்படி இருக்கிறார்கள்?

நீண்ட நாள் கழித்து இப்போதுதான் ஞாபகம் வந்ததா? என்று நீ நினைக்கக்கூடும்.
ஞாபகங்கள் எப்போதும் அழிவதில்லை தோழி. அவ்வப்போது எதிர்ப்படும் பர்தா முகங்களை பார்க்கையிலும், உன் பேர் கொண்ட எழுத்துக்களை பார்க்கையிலும்,கேட்கையிலும் , எனக்குள் உன் குழந்தையின் பிஞ்சு பாதகங்கள் தழுவும் தோறும் , இஸ்லாமியப் பெயர்கள் என் செவிகளில் நழுவும் தோறும் உனது ஞாபகங்கள் என்னைத் தொட்டுச் செல்கிறது...

எப்படி இருக்கிறது உன் படிப்பு?
பத்தாம் வகுப்பு தேர்வு நடக்குமா? நடக்காதா? என்று விவாதங்கள் சூடேறும் போது நீயும் குழம்பிப் போய்தான் இருப்பாய்? என்ன செய்வது அவ்வப்போவது நம் மக்களுக்கு விவாதத்திற்கு ஏதேனும் ஒருபொருள்தேவைப்படுகிறதே.. எது எப்படியோ நீபடித்துக் கொண்டிருப்பாய் எனபது மட்டும் நீ சொல்லாமலே அறிந்து கொள்ள முடியும். ஏனெனில் போன வருடம் எட்டாம் வகுப்புக்கே கணக்குக்கும் ஆங்கிலத்திற்கும் அவ்வளவு ஆர்வமாய் உன் தம்பியிடமும் என்னிடமும் பாடம் கற்றுக் கொண்டாய்..

திருமணத்திற்கு பிறகு பெண்கள் படிப்பது இப்போது அதிகரித்து வருகிறது.. கணவனோ அல்லது கணவன் வீட்டாரோ படிக்க வைப்பார்கள்.. ஆனால் உனது நிலைமை தான் கொஞ்சம் தலை கீழ்.. இரண்டு குழ்ந்தைகளுடன் தாய் வீட்டில் இருந்து படிக்கக் கூடிய நிலைமை.. அம்மா அப்பாவிற்கு பாரமாய் இருக்கக் கூடாது என்பதும் உன் பிள்ளைகளுக்கு உன் சம்பாத்தியத்தில் செலவு செய்ய வேண்டும் என்பது உனக்கான அதிக பட்ச ஆசை என்பதை அறிவேன்.. ஆனால் ஆயிஷா ஒரு பெண் பொருளாதார சுதந்திரம் அடையாமல் முன்னேற்றமோ விடுதலையோ கிடைத்து விடாது என்பதுதான் உண்மை.

இஸ்லாமிய மதத்தில் கணவன் இரண்டு மூன்று திருமணம் செய்து கொள்ள யாருடைய அனுமதியும் தேவை இல்லை.. இந்த காரணமே பெரும்பாலும் அவர்களுக்கொரு துணிச்சலை வழங்குகிறது.. அது மட்டுமின்றி பெண் என்பவள் ஆணுக்கான அணிகலன் என்பதாக பார்க்கப்படும் சமூகப் பார்வையும் ஒரு காரணம். ஆண் தவறு செய்தால் அவன் ஆண்பிள்ளை என்று சொல்லும் சமூகம் ஒரு பெண் சரியாகவே ஒரு காரியத்தை செய்தாலும் ஒரு பெண்ணுக்கு இது தேவையா? என்றே சொல்கிறது. இது மாற வேண்டும்..நாம் தான் மற்ற வேண்டும்.

திருமணம் என்பது ஒரு ஒப்பந்தமே. இனம் பெருகுவதற்கான ஒரு ஏற்பாடே.
அது பெரும்பாலும் பெண்ணுக்குத் தான் பாதகமாக இருக்கிறது.திருமணம் வாழ்வின் புத்தகத்தில் ஒரு அத்தியாயம். அந்த அத்தியாயம்மட்டுமே புத்தகமாகி விடாது. உனக்கு அது கசப்பை வாரி தெளித்திருந்தாலும் அதற்குள் இரண்டு ஆலம் விதைகளை தூவி போயிருக்கிறது.. உன் குழந்தைகள் உனக்கு எல்லாமுமாய் ஆகி விட்டார்கள்.இனி அவர்களை ஆளாக்குவதே உனக்கான பெரும் பொறுப்பாக இருக்கும்.

திருமணத்திற்கு பின் பெண்கள் சிரமப்படுவதற்கு காரணம் பல உண்டு.அதில் முதற்காரணம் பெண்ணை பெற்றவர்களுக்கு உண்டு. படிப்பை பாதியிலேயே நிறுத்துவது.. கணவனை மட்டும் கவனிப்பதே ஒரு பெண்ணுக்கான இலக்கணம் என்று பேசி பேசி நம்மையும் அதை ஏற்றுக் கொள்ள வைப்பது.. குடிகாரனாய் இருந்தாலும் பொறுத்துக் கொண்டு வாழ பழக்குவது..இப்படி பல காரணங்கள் இருக்கிறது..

உனது விஷயத்தை எடுத்துக் கொள்.. நீ படிப்பில் படு சூட்டி என்று எத்தனை முறை உன் அம்மா சொல்லிருக்கிறார்கள். ஆனால் ஏழாம் வகுப்பு படித்த போதே பெரிய பெண்ணாகி விட்டாய் என்று உனக்கு திருமணம் முடித்து வைத்து விட்டார்கள். அதோடு உனது குழந்தைத்தனம் மறைந்து பொறுப்புகளை சுமக்கும் பெரிய பெண்ணாக அடையளாப் படுத்தப்பட்டு விட்டாய்..

சமீபத்தில் உன் பேர் கொண்ட படம் ஒன்றை பார்த்தேன் ..அது குறு நாவலாக முன்னரே வந்த போது நான் படித்திருக்கிறேன்..உன்னிடமும் அதை ஒருமுறை சொல்லியிருக்கிறேன்.. அந்த குறும்படத்தை பார்க்கையில் ஒவ்வொரு காட்சியிலும் உன் முகம் எனக்குள் வந்து போகிறது.. அந்த சிறுமி உன்னைபோலவே நன்றாக படிக்கக் கூடியவள்..இவளின் அறிவுத்திறனிறகு எந்த ஆசிரியையும் தீனி போட முடியாமல் போக ஒரே ஒரு ஆசிரியை மட்டும் அவளுக்குள் மறைந்திருக்கும் அறிவியல் அறிவையும் , மிக நுட்பமான மனதையும் கண்டு பிடித்து இவள் பின்னாளில் ஒரு விஞ்ஞானியாக வருவாள் என்று நினைக்க அந்த பெண்ணோ தன் வகுப்பு ஆசிரியைகளின் அடிக்கு பயந்து அடி வாங்கினால் வலிக்காமல் இருக்க மருந்தொன்று கண்டு பிடிக்கிறாள். அந்த மருந்தை தன்னிலே பரிசோதனை செய்யும் முயற்சியில் இறந்து போகிறாள்..அவளுக்கு நெருக்கமான விருப்பமான அந்த ஆசிரியை கதறுகிறாள்..
அந்த அழுகையில் ஒரு ஒரு உயிர் போய் விட்டதே என்ற கவலையும் அந்த குழந்தையின் உணர்வை மதிக்க தெரியாத அந்த ஆசிரியர்களையும் அவளைச் சார்ந்தவர்களையும் இனி என்ன செய்வீர்கள் என்ற பார்வையுடன் அரற்றுவாள் அந்த ஆசிரியை.

அந்த ஆயிஷாவின் கேள்விகள் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. ஏன் இன்னும் ஒரு பெண் விஞ்ஞானி கூட உருவாக வில்லை.? என்ற கேள்வி மட்டுமல்ல அவளின் ஒவ்வொரு கேள்வியும் எல்லோரையும் உலுக்கிக் கொண்டே இருக்கும் .

ஆயிஷா இன்னும் ஒன்றும் குறைந்து விடவில்லை..உன் குழந்தையும் நீயும் ஒன்றாக படிப்பதே உனக்கொரு ஆனந்தத்தை தரும் . அவர்கள் ஒன்றாம் வகுப்பு நீ பத்தாம் வகுப்பு அவ்வளவே.. தொடர்ந்து படி.. பாடப் புத்தகங்களோடு வாழ்க்கையையும் சேர்த்து..

உனக்கான வெளி திறந்திருக்கிறது..பைக் ஓட்டக் கூட பர்தா போட்டுக் கொண்டு கற்றவள் ஆயிற்றே .. யோசி.. உன்னை பின்பற்றும் குழந்தைகளுக்கு முன் மாதிரியாய் இரு.. உன் வார்த்தைகளால் அல்ல..செயல்பாடுகளால் அவர்களை பின்பற்ற செய்.. சில அடையாளங்களை நீ துறக்கும் போது உனக்கென ஒரு புது அடையாளம் உருவாகும் தோழி ஆயிஷா..

உன் நட்பில் இளைப்பாறும்
இவள் பாரதி
READ MORE - அன்புள்ள ஆயிஷாவிற்கு..

5E

நானும் அரைமணி நேரமா நின்னுட்டு இருக்கேன்..நான் போக வேண்டிய 5E இன்னும் வரல ..அதென்னமோ தெரியல..நாம ஒரு பஸ்க்கு காத்திருக்கும் போதுதான் அந்த பஸ் வரவே வராது.. illanaa ethitha mathiri oppositela pokum.. இல்ல ஈ போக முடியாத அளவுக்கு கூட்டமா இருக்கும்..

காலைல எவ்வளவு சீக்கிரத்தில வந்தாலும் எல்லா பஸ்லயும் கூட்டம் நிரம்பி வழியுது.. என்ன செய்யட்டும் ..நானும் சீக்கிரம் வந்து பஸ் ஏறலாம்னு நினைச்சா கூட குளிச்சு கிழிச்சு கிளம்பு எட்டு மணியாயிடுது..

இதோட ஆபிஸ் மூணு இடத்துக்கு மாறிடுச்சு.. அப்பவும் ஒரே பஸ் தான். வடபழனில இருந்து அந்த நூறடி ரோட்டுல போலீஸ் ஸ்டேசனுக்கு எதித்த மாதிரி நின்னா வடபழனி டெப்போல இருந்து 5E வரும். பெசன்ட் நகர் வரைக்கும் போகும்..முதல்ல ஆபீஸ் சைதாபேட்டைல இருந்துச்சு.. அப்பவும் 5E தான்.. அதுக்கப்புறம் பெசன்ட்நகர்க்கு ஆபிஸ் மாறுச்சு.. இப்ப அடையாருல அதனால பஸும் மாறல.. டைமும் மாறல.. இப்ப இன்னும் கொஞ்சம் சீக்கிரமா போக வேண்டியிருக்கு.. அதுவும் ட்ராபிக் ல நின்னு நின்னு போறதுக்கு பஸ் பின்னால டிக்கெட் எடுக்காம நடந்தே போகலாம்னு தோணும்... ஆபிஸ்ல ட்ராபிக் னு சொல்லி தப்பிக்க மிடியாது..அதான் சென்னைல ட்ராபிக் அதிகம்னு தெரியுமே..முன்னமே கிளம்பிவர வேண்டியதுதானே அப்டின்னு சொல்வாங்க..
சில நேரங்கள்ல அப்டியே சீக்கிரம் கிளம்பினாலும் அப்பாவும் மாட்டிக்குவோம்.. ட்ராபிக்ல..

அதுமட்டுமில்ல நீங்க ஒரு எழுத்தாளராவோ , கவிஞராவோ இருந்தா ஒவ்வொரு சிக்னலா நிக்கும் போதும் மொபைல்ல இல்ல நோட்பேட்ல எழுத ஆரம்பிச்சா ஒரு வருஷத்துல ஒரு நாவலே வெளியிட்டுடலாம்.. அந்தளவுக்கு டிராபிக்.. அதுவும் கோயம்பேடு சிக்னல் கேக்கவே வேணாம்.. அரைமணி நேரம் ஒருமணி நேரம்லாம் சர்வ சாதரணமாதான் இருக்கும்..

உங்களுக்கு இன்னொன்னு தெரியுமா? சென்னைல இருக்குறவங்களுக்கு திரியும். மத்த ஊர்ல இருக்குறவங்களுக்கு தெரிஞ்சிருக்காது சென்னைல வந்து பஸ்ல போகாம இருந்துருந்தா..

சென்னைல முழுக்க கவர்மென்ட் பஸ்தான்.. தனியார் பஸ் கிடையாது.. அப்டி சொல்லிக்கலாமேயொழிய ஒவ்வொரு பஸ்லயும் ஒவ்வொரு டிக்கெட் ..வைட் போடுனா.. அதுக்கு தனி டிக்கெட் .. இன்னொன்னு டோர் உள்ள பஸ்.. அதுக்கு தனி டிக்கெட்.. இன்னொரு பஸ் இருக்கு.. சொல்ல மறந்துட்டனே ஏசி பஸும் இருக்கு..அதுலெல்லாம் நம்மள மாதிரி ஆட்கள் ஒரு நாள் டிக்கெட் எடுத்து போறதுக்கு மத்த பஸ்ல போன அஞ்சு நாளைக்கு போயிட்டு திரும்பிடலாம் அவ்வளவு காஸ்ட்லி..

இந்த பஸ்ல ஏறுனா இன்னொரு தொல்லை இருக்குங்க.. நீங்க முன்னால நின்னாலும் சரி..பின்னால நின்னாலும் சரி.. உட்கந்திருந்தாலும் சரி..நின்னாலும் சரி.. நீங்க இன்னொருத்தருக்கு டிக்கெட் எடுத்துக் கொடுத்தே ஆகணும்.. ஒருதடவை எடுத்துக் கொடுத்தா என்ன கொறஞ்சிடுவோம்னு சொல்றிங்களா? ஒருதடவை ரெண்டு தடவை கிடையாதுங்க.. பஸ் ஒவ்வொரு ஸ்டாப்ல நின்னு கிளம்பும் போதெல்லாம்தான்.. நீங்க ஒரே டைம் ல ரெண்டு வேலை பாக்குற மாதிரி.. உங்க ஸ்டாப் வந்தோடன இறங்கி போற பயணியும் நீங்கதான்.. அதுவரை பஸ்குள்ள கண்டக்டரும் நீங்கதான்... டிக்கெட் வாங்கி கொடுத்து மீதி சில்லரை வாங்கி கொடுக்குறதுக்குள்ள உங்களுக்கு வேர்த்து கொட்டிடும்..

சரி.. கண்டக்டர் என்ன பண்ணுவாருனு தான கேக்குறிங்க.. அவர் நின்ன இடத்த விட்டு..இல்ல அவர் பின் கதவோரத்துல உக்காந்திருக்க சீட்ட விட்டு எந்திரிக்க மாட்டாரு..அவர சொல்லி குத்தமில்லீங்க.. உள்ள காலாற நடக்கவா இடம் இருக்கு.மூச்சு கூட அடுத்தவன் மேல்தான் விட வேண்டியிருக்கு.. அந்தளவுக்கு கூட்ட நெரிசல்.. இதுல சில பேர் பண்ற அலும்பு இருக்கே சொல்லவே முடியாது.. இப்படி தான் தினமும் ஒவ்வொரு பொண்ணும் என்னை போலவே போறாங்க வலிகளோட வேலைக்கு..

சரி.. நான் போக வேண்டிய 5E வந்திடுச்சு.. வரட்டுமா?
READ MORE - 5E